
திருவனந்தபுரம்:
தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் தன் முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரின் சதி இருப்பதாக நடிகர் திலீப் கூறியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் சீண்டல் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடியான நிலையில், திலீப் கேரள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதனால் திலீப் மீண்டும் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு, தனது தரப்பு நியாயங்கள் சரியாக முன் வைக்கப் படாததே காரணம் என்று கருதிய திலீப், தனக்காக இதுவரை ஆஜரான வழக்கறிஞரை மாற்ற முடிவு செய்தார்.
பின்னர், திலீப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வழக்கறிஞர் ராமன்பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். அவர், திலீப்புக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சிலவற்றை திலீப் தெரிவித்துள்ளார். அதில், ‘நடிகை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரை சந்தித்ததும் கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே அவரை எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இதன் பின்னணியின் என் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியாரின் சதி உள்ளது.
நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்ல் பங்கேற்ற மஞ்சு வாரியார், என்னை இந்தக் குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் சில் கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து நான் போலீசாரிடம் கூறியுள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்த போது, மஞ்சு வாரியார் குறித்தும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார்மேனன் குறித்தும் முக்கிய தகவல்களை அளித்தேன். மஞ்சு வாரியாருக்கும் ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு குறித்துக் கூறிய போது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த காமிராக்களை அணைத்து விட்டார். இந்த சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்துள்ளது. அதில், நான் சிக்கிக் கொண்டேன்’ என்று தனது புதிய ஜாமீன் மனுவில் திலீப் கூறி உள்ளாராம்.
இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.



