
பாஜகவில் இணைந்த அண்ணாமலை.. ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்..!
பாஜக.,வின் பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் தலைமையில், அக்கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை, பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
ஐபிஎஸ் அதிகாரியாக, கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய கே.அண்ணாமலை, பெங்களூரு, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையில் முக்கிய பதவிகளை வகித்தவர். கர்நாடகத்தின் சிங்கம் என அடைமொழியோடு அழைக்கப்பட்டவர். அவர் திடீரென 2019ஆம் ஆண்டு, பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தனது கிராமத்துக்கு திரும்பினார். தொடர்ந்து, தனது கிராமத்திலேயே இயற்கை விவசாயம் செய்வது, சமூகத் தொண்டில் ஈடுபடுவது என ஒரு சமூக ஆர்வலராக மாறினார்.
அண்ணாமலை ஏதாவது கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது. அதனை மெய்யாக்கும் வகையில், அவர் இன்று, தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியில் பணியாற்ற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட விளக்கக் கடிதத்தில்…
நான் இன்று புது தில்லியில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி இணைந்துள்ளேன். நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலை நோக்குப் பார்வையும் ஆற்றல்மிக்க தலைமையும் என்னை எப்போதும் ஈர்த்துள்ளன. நமது பிரதமரின் தலைமையில் உலக அரங்கில் இந்தியா ஒரு ஆற்றல் வாய்ந்த சக்தியாக உருவெடுத்து வருகிறது
லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து அகற்றி நம் உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்யாமல் நம் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று மேலும் அந்த கொள்கைகளினால் நம் நடுத்தர வர்க்கத்தை செழிக்க செய்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்
இந்நாட்டின் சாதாரண மனிதர்கள் மற்றும் அவர்களின் அபிலாசைகளை சுமந்து நிற்கும் ஒரு கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தக் கட்சி எப்போதுமே நம் தேசத்தைப் பற்றிய எண்ணத்தை மையமாகக் கொண்டு நாம் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது
ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. தற்போது கட்சி தமிழகத்துக்கும் நமது தேசத்துக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறது
புது தில்லியில் இருக்கும் சரியான தலைவர்களின் வழிகாட்டுதலால் நமது நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக திரு மோடி அவர்களின் தலைமையின் கீழ் நம் நாடு அதன் சரியான இலக்கை அடைவதற்கான நான் உண்மையில் ஆர்வமாய் இருக்கிறேன்
நமக்குரிய முன்னேற்றம் மற்றும் வெற்றி இன்னும் சிறிது காலத்தில் கிட்டும் அந்த இலக்கை நம்நாடு அடைய நானும் ஒரு சிறிய பங்காற்ற விரும்புகிறேன்… – என்று கே அண்ணாமலை தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது குறித்து கடிதம் வெளியிட்டுள்ளார்
