ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்தை ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த மெரிட்பாபு என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
லக்காபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார், பேருந்திற்கு அடியில் சிக்கி இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 4 பேரின் சடலங்களையும் மீட்டனர்.
பின்னர், 4 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த பயணிகளும் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை விசாரணை செய்ததில், உயிரிழந்தவர்கள் மொடக்குறிச்சி அருகே குளூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, பாவாத்தாள், மோகனாபுரி, பொங்கியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த ஒன்றாம் தேதி மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், அரசு பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.