ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு டெல்லியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் டெல்லி வந்த முர்மு பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் முர்மு, ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்டு புதுடெல்லி வந்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், புதுடெல்லி வந்த திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நாட்டில் நிலவி வரும் அடிமட்ட பிரச்னைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள இவர் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருப்பார்கள். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திரவுபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என தெரிய வந்துள்ளது.





