
சென்னை:
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவு ஒன்றில், கடந்த மாதம் 27ம் தேதி இரவு, கார் தீப்பிடித்து எரிந்து, அடனுள் இருந்த 3 பேர் உடல் கருகி இறந்தனர்.
இது குறித்து விசாரித்தபோது, காருக்குள் இருந்தவர்கள் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன் (52), அவரது மனைவி ரமாதேவி (46), மகள் திவ்யஸ்ரீ (24) என தெரியவந்தது. திவ்யஸ்ரீ இத் தம்பதிக்கு ஒரே மகள் என்பதும், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது கணவர் சரத் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் ராணுவ மையத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இவர்கள் மூன்று பேரின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தனர். மேலும், நேற்று அளிக்கப்பட்ட தடயவியல் துறை சோதனை முடிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், 3 பேரின் உடல் மீதும் தீ பிடிப்பதற்கு முன்பாக பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளதும், கார் இன்ஜின் மற்றும் ஏ.சி இயந்திரத்தில் எந்தவிதக் கோளாறும் ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
முன்னதாக, மாமல்லபுரம் போலீசார் கிழக்குக் கடற்கரை சாலை, உத்தண்டி சுங்கச் சாவடியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் 27ஆம் தேதி இம்மூவரும் வந்த கார் எவ்வித பிரச்னையும் இல்லாமல் செல்வது தெரிய வந்தது. மேலும், சில நாட்கள் முன்பு திவ்யஸ்ரீயின் கணவர் சரத், தாம்பரம் போலீஸ் உதவி ஆணையருக்கு பதிவு தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் வரதட்சணை கேட்டு அடித்ததாக போலீசில் புகார் கொடுப்பேன் என மனைவி திவ்யஸ்ரீ தன்னை மிரட்டுவதாகக் கூறி இருந்தார். இதனை உதவி ஆணையர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகியோருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்திருப்பதும் தெரியவந்தது.
மேலும், 27ம் தேதி, புகார் கொடுத்த சரத் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து வெகுநேரம் காத்திருந்தாராம். அப்போது, இம்மூவரும் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதும், பதான்கோட்டில் திவ்யஸ்ரீக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் இது வெளியே வந்தால், தங்களுக்கு அவமானம் என்று கருதிய மூவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். மேலும், அவர்கள் 3 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.



