சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், மணியாச்சி ரெயில் நிலையத்தில் 1911–ம்
ஆண்டு ஜூன் 17–ந் தேதி ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று, தானும்
தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செங்கோட்டையில்
வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி 106–வது நினைவு நாள் நிகழ்ச்சி செங்கோட்டையில் கடைபிடிக்கப்பட்டது.
வாஞ்சிநாதன் உயிர்நீத்த நேரமான காலை 10.50 மணிக்கு செங்கோட்டை நகரசபை சங்கு
ஒலித்தது. தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
செங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு வாஞ்சிநாதன் தம்பி மகன்
அரிகரசுப்பிரமணியன், அவருடைய மகன் வாஞ்சி கோபால கிருஷ்ணன் மற்றும் சுதந்திர
போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் வாஞ்சிநாதன் அரசினர் நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும்
மற்றும் பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.