
பெங்களூர்:
சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தியது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி.,யாக இருந்த ரூபா புதிய வீடியோக்கள் உள்பட 74 ஆதாரங்களைத் தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட புகார்களை அடுத்து, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அந்த சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில், சசிகலாவுக்கு தனி சமையலறை அமைத்துக் கொடுத்திருந்ததையும், சசிகலாவுக்கு சில சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அதிகாரி ரூபா, விவரமாக ஓர் அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பிவைத்தார். மேலும், இந்த சிறப்பு வசதிகளை செய்து கொடுத்ததற்காக, சசிகலா தரப்பிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சுமத்தினார். இதன் பின்னணியில், சத்யநாராயண ராவும், ரூபாவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடுக்கப்போவதாகவும் ரூபா மீது சத்யநாராயண ராவ் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், விசாரணை அதிகாரி வினய்குமார் பெங்களூரு சிறையில் ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் ஒருபகுதியாக கடந்த சனிக்கிழமையன்று வினய்குமார் முன்பாக ரூபா ஏராளமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தார். அதில் புதிய வீடியோக்களும் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோவில் சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடையில் வெளியே இருந்து பைகளுடன் சிறையின் மெயின் கேட் வழியாக உள்ளே நுழையும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் ஆண் கைதிகள், போலீசாரும் நடமாடுவதும் இடம்பெற்றுள்ளது.
இதைப் போல், 74 ஆதாரங்களை ரூபா தாக்கல் செய்துள்ளார். மேலும் பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய வேண்டும் என ரூபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சசிகலா தரப்பினரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது,


