ஈரோடு: தாலி கட்டிய கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை சிம்ரன் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சிம்ரன் (28) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கே மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷிடம் திருநங்கை சிம்ரன் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், நான் ஒரு திருநங்கை. எனக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு ஆலமரத்து வீதியில் உள்ள முனியப்பன் கோயிலில் வைத்து அவர் எனக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்காக நான் எனது உடலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில் எனக்கு தாலி கட்டிய எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். அவரை என்னோடு சேர்ந்து வாழச்செய்ய வேண்டும். எனது கணவரால் நான் நிறைய இழந்து விட்டேன். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். நான் அவரது மனைவி என்ற முறையில் எனக்கு அவர் ஜீவனாம்சம் வழங்கவேண்டும். எனது கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்கச்செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். அந்த மனுவுடன் திருநங்கை சிம்ரனும் அவருக்குத் தாலி கட்டியதாகக் கூறப்படும் இளைஞரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், திருமண மாலையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் கொண்டு வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். இது அதிகாரிகள், மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவரை சேர்த்து வையுங்கள்: ஈரோட்டில் திருநங்கை போராட்டம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

