கோவை:
திருமணம் செய்வதாகக் கூறி பலரை ஏமாற்றிய புதுமுக நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
‘ஆடி போனால் ஆவணி’ படத்தில் நடித்தவர் புதுமுக நடிகை ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளனர். அப்படி சாஃப்ட்வேர் இஞ்சினியரான சந்தோஷ்குமாரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.43 லட்சம் வரை மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை ஸ்ருதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஃபேஸ்புக்கில் கவர்ச்சியான போட்டோவைப் போட்டு கவர்ந்தார் ஸ்ருதி. பாலமுருகனை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்துள்ளார். இதை அடுத்து ஸ்ருதி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார், பல திடுக்கிடும் தகவல்களைப் பெற்றனர். திருமண ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். லண்டன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் டான்ஸ் பயிற்சி, படிப்புகளையும் ஆடம்பரமாக செலவு செய்து படித்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என ஒரே நேரத்தில் பலருடன் பேசியுள்ளார். செல்போன், சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதே பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். 3 ஆண்டுக்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார் ஸ்ருதி.
பலரிடமும் இதேபோல் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதும், பணத்தைத் திருப்பிக் கேட்பவர்களை மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.