சென்னை: தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. அதிலும் இந்த ஆண்டு வரும் இவ்விழாவானது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. எனவே, இதன் முக்கியத்துவத்தை குறித்து அறிந்து, அதற்குத் தக்க ஏற்பாடுகளை கடந்த பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு வருகிறது.
இவ்விழா குறித்து தமிழக அரசுக்கும் முறைப்படியான அழைப்பிதழ் கொடுத்து, வேண்டிய ஏற்பாடுகளை செய்து தர தாமிரபரணி புஷ்கரம் விழாக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். மாவட்ட கலெக்டர் இவ்விழா சிறப்பாக நடைபெற பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற விழாக்கள் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட விழாவிற்கு ஓர் ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்டு, மாநிலத்தின் பெருமையை உலகறிய செய்யும் வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். அடுத்த ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவிற்கு, இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறும் செய்திகளைப் பார்க்கிறோம்.
சாலைகளை விரிவாக்கம் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடு குறித்த கூட்டங்கள் நடைபெற்று, இந்து அமைப்பினர், ஆன்மிகக் குழுக்கள், பக்தர்கள் போன்ற பல்வேறு தரப்பனரிடம் உ.பி. அரசு கருத்து கேட்டு விரிவான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறது.
அதுபோல தாமிரபரணியில் நடைபெறும் புஷ்கரம் விழாவிற்கு தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து, நன்கு விளம்பரப்படுத்தி உலக முழுவதும் தாமிரபரணியின் பெருமை, திருநெல்வேலியின் சிறப்பை கொண்டு சேர்க்க பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த நல்ல வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் கூட தடுக்கவும், சீர்குலைக்கவும் நடக்கும் நடவடிக்கைகள் பார்த்தால், இவை தமிழக முதல்வரின் கவனத்திற்குச் செல்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
தற்போது, இரண்டு படித்துறை தவிர மற்றவற்றில் நீராடலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியதாக ஒரு செய்தி கூறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் தீர்த்தவாரிக்கு சுவாமி எழுந்தருளக் கூடாது என்றும், படித்துறைகளில் இந்து அமைப்புகளை அனுமதிக்க கூடாது என்றும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வந்துள்ளது.
உலகமே வியந்து போற்றும் புஷ்கரம் நடக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் போக்கை தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். ஆகமத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் என்ன சம்பந்தம்? மாவட்ட ஆட்சியர் ஒன்று கூறுகிறார். இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மாவட்ட இணை ஆணையர் ஒன்று கூறுகிறார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும் அதிகாரிகள் ஒன்று கூறுகிறார்கள்.
கடந்த ஓர் ஆண்டாக தாமிரபரணி புஷ்கரத்திற்கு ஆன்மிக குழு அமைத்து பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வரும் வேளையில் இதுபோன்ற குழப்பத்தால் நிர்வாக மெத்தனம் ஏற்பட்டுவிடக்கூடாது. பல லட்சம் பேர் கூடும் இத்திருவிழாவில் அரசு மிகுந்த கண்காணிப்போடு இருந்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.




