சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் மற்றும் பலத்த காயமடைந்ததால் ஊனமுற்ற 5 பேர் ஊனமுற்றோரின் வாரிசுகள் 4 பேர் என காயமடைந்த 9 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .
அப்போது, உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், எவர் எவருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப் பட்டு மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர், காயமடைந்ததால் ஊனமுற்ற 9 பேர் உட்பட மொத்தம் 19 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.




