மாணவனுடன் காணாமல் போன ஆசிரியை: தேடும் பணி தீவிரம்

Published:

teacher-kothai-sengottai செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். மனைவி மாரியம்மாள். இவர்களின் மகன், தென்காசி – கடையநல்லூர் சாலையில் குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தான். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி முதல் அந்த மாணவனைக் காணவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். செங்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை கோதைலட்சுமி (வயது 23) இவர் திடீரென மாயமானார். இவர் காணாமல் போனது குறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் 2 பேருக்கும் இடையே வயது வித்தியாசத்தையும் ஆசிரியை மாணவன் முறையை மீறி காதல் ஏற்பட்டதாகவும், 2 பேரும் வெளியூருக்கு தப்பிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் பல்வேறு கோணங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவர் குறித்தும் நேற்று மேலும் பல்வேறு தகவல்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகி, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 பேரும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2 பேரும் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சில புகைப்படங்கள் வெளியாயின. ஆனால் இவற்றில் பெரும்பாலான படங்கள், இதற்கு முன்பு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளின் படம் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டது. வாட்ஸ் அப்பில் போலியான படங்கள் மற்றும் தகவல் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே ஆசிரியை மற்றும் மாணவனைக் கண்டுபிடிக்க செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரையும் மீட்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img