சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.
இதனிடையே ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக தனது ரசிகர்களிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கோரிக்கை வைத்தார்.
நான் கர்நாடகத்தில் 23 வருடங்கள் வாழ்ந்தேன். ஆனால் தமிழகத்தில் 43 வருடங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் கர்நாடகத்தில் இருந்து வந்திருந்தாலும் நீங்கள் என்னை வரவேற்று ஏற்றுக் கொண்டீர்கள். என்னை உண்மையான தமிழனாக ஆக்கியிருக்கிறீர்கள். எனக்கு என்று சில கடமைகள், பணிகள் இருக்கின்றன. அதுபோல் உங்களுக்கும் நிறைய கடமைகள், வேலைகள் இருக்கும். முதலில் அதை சரியாகப் பார்ப்போம். ஆனால், எப்போது போர் வருமோ அப்போது பார்த்துக் கொள்வோம்… என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.