சென்னை:
ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், மற்றும் ஆறுமுகம் மேற்கொண்டுள்ள இம்முயற்சி சரியானது; பாராட்டத்தக்கது ஆகும்.
உலகில் வேகமாக அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தமிழை உலகின் பல நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கும், தமிழ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இவர்கள் போராடி அனுமதி பெற்றுள்ளனர். தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி செலுத்த வேண்டும் என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதில் ஆறில் ஒரு பங்கை அதாவது சுமார் 7 கோடியை தாங்களே செலுத்துவதாக இவர்கள் முன்வந்துள்ளனர். மீதமுள்ள நிதியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நன்கொடையாக திரட்ட அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கு உதவி செய்ய வேண்டியது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும். ஆனால், இது தொடர்பாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.
தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்தன. அதன்பயனாக தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதாகவோ, தமிழ் மொழியை மற்ற நாடுகளில் பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பல நூறு கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட போதிலும் அதனால் தமிழுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டால் தமிழுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
உதாரணமாக ‘யோகா’ கலை இந்தியாவில் தான் தோன்றியது. ஆனால், அதன் பல்வேறு சிறப்புகளை அறிவியல்பூர்வமாக வெளிக்கொண்டு வந்தது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தான். கவலை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை போக்கவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தவும் யோகா கலை உதவுகிறது என்பதை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தான் நிரூபித்தது. யோகா கலை உலகம் முழுவதும் பரவி இருப்பதற்கு இத்தகைய ஆராய்ச்சிகள் தான் காரணமாகும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டால் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகள் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பது உறுதி. தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் போதிலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை வெளிக்கொண்டு வரப்படாத தமிழின் சிறப்புகள் நிச்சயமாக வெளிக்கொண்டு வரப்படும் என்பதில் ஐயமில்லை. மேலும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் குடும்பங்கள் தமிழ் படிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். இந்த முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி இயன்ற அளவுக்கு உதவி செய்ய முடிவு செய்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்று கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்பட வில்லை. தமிழ்த் தாய் சிலை அமைப்பது வரவேற்கப்பட வேண்டியது தான் என்றாலும், தமிழ்த் தாயை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்வதற்கான இந்த முயற்சி அதைவிட முக்கியம் ஆகும். எனவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல், சமஸ்கிருத மொழி குறித்த ஆராய்ச்சிக்கும், பிரச்சாரத்திற்கும் பெருமளவில் நிதி உதவி செய்யும் மத்திய அரசு அதைவிட மூத்த, இனிய மொழியான தமிழ் மொழியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு வகை செய்யும் இத்திட்டத்திற்கும் நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.