புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கறம்பக்குடி அதிமுக கட்சி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
விஜயபாஸ்கர் திட்டியதைக் கண்டித்து முத்தரையர் சங்கத்தினர் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.
இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், கல்வீச்சு என காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையில் பெரும் பிரச்னை உருவானது.
அந்த பிரச்னையில் சிலர் தாக்குதல் நடத்தியதால் சிலருக்கு மண்டை உடைப்பு போன்ற பல்வேறு இரத்த காயங்களும் ஏற்பட்டன.
நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய பல ஊடக நிர்வாகங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
பணியாற்றுவோர் சென்று இருந்தனர்.
அப்போது பல முண்ணனி ஊடகங்களில் பணியாற்றுவோர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செய்தி வெளியிடாமல் இருக்க அமைச்சரின் பி.ஏ. அன்பானந்தத்திடம் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊடகத் துறையினர் லஞ்சம் பெற்றதால் பல முண்ணனி ஊடகங்களில் விஜயபாஸ்கருக்கு எதிரான செய்திகள் வெளியாகவில்லை என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தினரால் பரவலாகப் பேசிப்படுகிறது.
சில ஊடகங்களில் பணியாற்றுவோர் லஞ்சம் பெறாமல் மிக நேர்மையாகப் பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டுபவர்களால் கூறப்படுகிறது.
மேலும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தான அனைத்து செய்திகளையும், கீழே சொல்லப்படும் செய்திகளையும் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் மற்றும் பலர் ஊடகங்களில் பணியாற்றுவோரை செய்தி வெளியிடவும், வெளியிடாமல் இருக்கவும், லஞ்சம் கொடுத்து அவர்களது காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
சில ஊடகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் லஞ்சம் பெறாமல், லஞ்சம் கொடுப்பவர்களுக்குப் படியாமல் மிக நேர்மையாக பணியாற்றினாலும் அவர்களுக்கு மேல் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது ஊடகங்களின்
உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்டி அவர்களது காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
சோரம் போன பல ஊடகங்கள் மற்றும் தொழிலாளர்கள் என வாட்ஸ் ஆப்பில் செய்தியை பரவவிட்டுள்ளவர் கூறியுள்ளார்.


