திருப்பூர் அருகே கண்மாயில் இருபாம்புகள் பிணைந்து ஆடிய நடனம்..

Published:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக அணைக்கு நீர்வரத்து இன்றி வறண்டு கிடந்தது. மேலும் தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு திறக்கப்படாததால் பொதுப்பணித் துறையும் இவ்வணை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இதனால் அணையின் நீர்தேங்கும் பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நின்றன. முட்புதர்கள் ஆண்டு கணக்கில் இருந்ததால் மான்கள், முயல்கள், கீரிகள், குள்ளநரிகள் மற்றும் ஏராளமான மயில்களின் வசிப்பிடமாக மாறிப்போனது. சீமை கருவேல மரங்கள் இல்லாத பகுதிகளில் வளரும் புற்களை அருகில் உள்ள விவசாயிகள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வந்தனர். கால் நூற்றாண்டாக நீரின்றி காய்ந்து கிடக்கும் அணைக்கு பிஏபி. பிரதான வாய்க்காலில் உள்ள கள்ளிபாளையம் மதகில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் பொது மக்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு கட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு நவம்பரில் கள்ளிபாளையம் மதகில் இருந்து வட்டமலைக்கரை ஓடை வழியாக தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து அணை ஒரு வாரத்தில் அதன் முழு கொள்ளளவான 24 அடியில் 22 அடிக்கு நிரம்பியது. 25 ஆண்டுகள் கடந்து அணை நிரம்பியதால் விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து 4 மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நின்றதால் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. அதோடு ஏற்கனவே வறண்டு கிடந்த அணைப் பகுதியில் வசித்து வந்த மான், முயல், காடை, கௌதாரி, கீரி உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கையிலும், பறவையினங்களிலும் மாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் நல்ல பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை ஆவணப்படுத்தி வரும் உத்தமபாளையத்தை சேர்ந்த லோகநாதன் எனும் புகைப்படக்காரர், அணை வறண்டு கிடந்தது முதல் தற்போது அணையில் கடந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கிய பின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை பதிவு செய்துள்ளார். அதன்படி தற்போது மூன்று முறை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்ட பின் அணையில் சுமார் 2 அடிக்கு தண்ணீர் உள்ளது.

தற்போது அணையில் மான்கள் ,முயல்கள் ,கீரிகள், பறவைகள் எண்ணிக்கையும், பாம்புகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. தண்ணீர் தேங்கியதால் வட்டமலைக்கரை அணையில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் பற்றி அவர் எடுத்த படங்களில், சுமார் 8 அடிக்கு மேலாக நீளமுள்ள இரு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, பின்னிப் பிணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடியதை பதிவு செய்துள்ளார். 25 ஆண்டுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த அணைப்பகுதியில் இந்த 8 மாதங்களாக தண்ணீர் தேங்கியதால் 78 வகை பறவைகள் இருப்பதும், இதன் மூலம் சுற்றுச்சூழலிலும், உயிரினங்களின் எண்ணிக்கையிலும் ஏற்பட்ட நல்ல பல மாற்றத்தை எடுத்துக் கூறுவதாக இப்படங்கள் அமைந்துள்ளன. சாரைப் பாம்புகளின் இந்த செயல் பற்றி திருப்பூர் இயற்கை கழகத்தின் ரவீந்திரன் கூறுகையில், இயற்கை அதன் பருவங்களுக்கு ஏற்ப சமநிலையில் இருக்கும்போது உயிரினங்கள் பல்கி பெருகுவது நடைபெறும். இதில் பாம்புகள் சூழலுக்கு ஏற்ப இடம் மாறுவது நடக்கும். பாம்புகள் பொதுவாக இணை சேரும்போது இப்படி பின்னிப்பிணைந்து நடனமாடுவது போல் செயல்படும். அதே நேரத்தில் எல்லைப் பிரச்சனை வரும் போதும் இப்படி நடைபெறும். இதில் எது என்பதை கண்டுபிடிப்பது சிரமம் என்றார். எது எப்படியோ இரு சாரைப் பாம்புகள் புகைப்படத்தில் சிக்கியிருப்பது வட்டமலைக்கரை அணைப்பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பட்டு வருவதை காட்டுவதாக உள்ளது.

1732379 stream - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img