திருப்பூர் அருகே 2 குழந்தைகளை அடித்தே கொன்ற தாய் தானும் தற்கொலை முயற்சி..

Published:

tpr3 - 2026

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை அடித்தே கொன்ற நோயால் அவதிப்பட்டு தாய் தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த ஓலப்பாளையம் அத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேச கவுண்டர் மகன் கனகசம்பத் (46). விவசாயி. 20 ஏக்கர் நிலம் உள்ளது. இவருடைய தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். ஒரு சகோதரிக்குத் திருமணமாகி வெளியூரில் உள்ளார். தாய் விஜயமணி (71). கனகசம்பத்துக்கும், காங்கயம் படியூர் கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரேவதி (எ) பேபி (39) என்பவருக்கும் திருமணமாகி 14  ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர்ஷிதா (13), கலைவேந்தன் (7) என்கிற இரண்டு குழந்தைகள். இவர்கள் இருவரும் வெள்ளக்கோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வந்தனர். கனகசம்பத் தாயார், மனைவி, குழந்தைகள் ஒன்றாக வசித்தனர். 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகளைப் பார்த்து விட்டு, கனகசம்பத் ஓலப்பாளையத்துக்கு வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் தாய் விஜயமணி போன் செய்து வீட்டிலிருந்த மனைவி, குழந்தைகளைக் காணவில்லை எனக் கூறியுள்ளார். கனகசம்பத் பக்கத்து வீடுகளில் தேடிப் பார்த்து விட்டு தோட்டத்துக்குச் சென்று பார்த்துள்ளார். அங்குள்ள விவசாய பொருள்கள் வைக்கும் சிறிய அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அறை உள்ளே தாழிடப்பட்டிருந்ததால் விட்டத்தில் ஏறி அறைக்குள் குதித்துப் பார்த்த போது, அங்கு குழந்தைகள் இருவரும் தலை, முகத்தில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் பேச்சு மூச்சின்றிக் கிடந்துள்ளனர். பக்கத்தில் ரத்தக் கறையுடன் இரும்பு பைப் ஒன்றும், ரவுண்ட் அப் களைக்கொல்லி மருந்து பாதியளவு இருந்த டப்பாவும் கிடந்துள்ளது. மனைவி வாந்தி எடுத்து மயங்கிக் கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு மூவரையும் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், ரேவதி களைக்கொல்லி விஷ மருந்து குடித்ததும் தெரிய வந்தது. ரேவதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலையின் பின் பகுதியில் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக வலி அதிகமாக இருந்துள்ளது. வலி அதிகமாக வரும் போது கோபமாக கத்துவதும், சிறிது நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக இருந்துள்ளது. 

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குழந்தைகள் தான் இல்லாமல் இருக்கக்கூடாதென நினைத்து, அவர்களை இரும்பு பைப்பால் அடித்துக் கொன்று விட்டு, அவர் விஷம் குடித்துள்ளார். தற்போது ரேவதி கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
குழந்தைகளைக் கொன்று, தற்கொலைக்கு முயன்ற தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு கனகசம்பத் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜே.ரமாதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img