காங்கயம்-கார் மீது லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி..

Published:

accident - 2026
காங்கயம் அருகே திட்டுப்பாறை பகுதியில் நடைபெற்ற விபத்தில், விபத்துக்குள்ளான கார் மற்றும் லாரி. 

காங்கயம்: காங்கயம் அருகே திங்கள்கிழமை காலை கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். ஒருவர் காயம் அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளக்காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (35). திருமணமான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் காங்கயம் பேருந்து நிலையம் அருகே, பழையகோட்டை சாலையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் விசுவநாதனும், அவரது மாமியார் மணி (55), மணியின் மருமகன் ரமணன் (37), மணியின் மகள் உமாவதி (33) ஆகிய 4 பேரும் காரில் திங்கள்கிழமை காலை சென்னிமலை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, ஒரே காரில் காங்கயம்-சென்னிமலை சாலை வழியாக சென்றுள்ளனர். காரை விசுவநாதன் ஒட்டிச் சென்றுள்ளார்.

அப்போது காலை 6 மணியளவில் காங்கயம்-சென்னிமலை சாலை, திட்டுப்பாறை அருகே பாரவலசு  பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கார் மீது மோதியது. 

இதில், விசுவநாதன் மற்றும் மணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரமணன், அவரது மனைவி உமாவதி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரையும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணன் இறந்துவிட்டார். இறந்தவர்களின் சடலம் காங்கயம் அரசு மருத்துவமனை உடல் கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
காங்கயம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img