
நாமக்கல்லில் தனியார் பள்ளி ஆசிரியை கொலை செய்த கணவர் நாமக்கல் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.
நாமக்கல் அருகே தூசூரைச் சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் ராஜா (42). இவரது மனைவி பிரமிளா (32) நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி பிரமிளா நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவர் ராஜா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இச்சூழலில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி பிரமிளாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கணவர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





