தமிழகத்தின் எத்தனையோ அரசியல் பிரச்னைகள், சமூக நிகழ்வுகளை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக அடிக்கப்பட்ட 100 நாள் தொலைக்காட்சிக் கூத்தின் முதல் எபிசோட் ஒருவழியாக முடிந்திருக்கிறது. ஆக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் இனிதே முடிவடைகிறது.
நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி என பலரையும் வடிகட்டிய எஞ்சியிருந்த சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக ‘100-வது’ நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது, அந்த ஒருவரை அறிவித்தார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஓவியா வந்தபோது பெரும் அதிர்வலை! ‘என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனா, பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஒரு ஐடியா கொடுத்துச்சு. நன்றி பிக் பாஸ் அன்ட் லவ் யூ ஆல்’ என்று சொல்லி தன் பேவரிட்டான, ‘கொக்கு நெட்ட’ பாடலைப் பாடியும் காட்டினார்.
பிக் பாஸில் நடந்த நிகழ்வுகளின் குறுந்தொகுப்பைப் போட்டுக் காட்டினார்கள். அதில் ஓவியா. ‘இது விளையாட்டு இல்லை. என் வாழ்க்கை. எனக்கான அடையாளம்’ என்றார். ‘நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் சிறந்த படம் பிக் பாஸ் தான் ‘ என்றார் பரணி.
நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம். ஓவியாவை கன்ஃபெஷன் ரூம்க்கு அழைத்து ஒரு கடிதத்தைப் படிக்க சொன்னார் பிக் பாஸ். ஓவியா உதட்டை அசைக்க, அதற்கு வாய்ஸ் கொடுத்தார் கமல். பின், ஓவியாவை உள்ளே அழைத்து ஒரு போட்டியாளரை மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். சிறிது நேர விளையாட்டுக்குப் பின், ஹரீஷ் கல்யானை அழைத்துச் சென்றார் ஓவியா.
‘உள்ளே உள்ள சினேகனையும் ஆரவ்வையும் நான் போய் அழைத்து வரப் போகிறேன்’ என்றார் கமல். அப்போது ஒரு குறும்படத்தில், “பிக் பாஸ் என்ற பெயரில் பேசிய குரலை இனி கேட்க முடியாது. ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி பிக் பாஸ் குரல் விடைபெற்றது. அதைக் கேட்டதும் கண் கலங்கினார் சினேகன். பின்னர், ‘விரு விரு மாண்டி விருமாண்டி’ பாடலுடன் மூவரும் மேடை ஏறினார்கள். அப்போது பேசிய கமல், ‘இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கே வருவேன். வந்தே தீருவேன். ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வரவில்லை; கடமையில் வருகிறேன். இங்கு கிடைக்கும் அன்பு அங்கேயும் கிடைக்கும் என நம்பிகிறேன்.’ என்றார்.
அவர் பேசி முடித்ததும் பெரும் ஆரவாரங்களுக்கு இடையே பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை அறிவித்தார் கமல். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கியதுடன், இந்த 100 நாள் கூத்தும் முடிவடைந்தது.