திருமலையில் நடப்பு செப்டம்பர் மாதம் 13, 20-ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 4,000 பேருக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் (65 வயதுக்கு மேல்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவஸ்தானம் தினசரி 2 முறை 1500 பேருக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என மூத்த குடிமக்கள் சிலர் தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனைப் பரிசீலித்த தேவஸ்தானம் கடந்த ஜூலை மாதம் முதல், மாதத்துக்கு இரு முறை 4000 பேருக்கு தரிசனம் வழங்கும் முறையை கொண்டு வந்தது.
அதன்படி, இம்மாதம் 13 மற்றும் 20 ஆகிய இரு தேதிகளில் காலை 10 மணிக்கு 1000 பேர், மதியம் 2 மணிக்கு 2000 பேர், 3 மணிக்கு 1000 பேருக்கு என இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன்களை அவர்கள் திருமலை அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுண்டரில் பெற்று தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.
மேலும் 0-5 வயது வரையுள்ள கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இம்மாதம் 14 மற்றும் 21-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் 1.30 மணிவரை(எண்ணிக்கை இல்லை) சுபதம் வழியாக இலவச தரிசனம் வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


