
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி – அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. மேலும் காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 5-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், அதை தொடர்ந்து முருகன் தேர், பின்னர் நடராஜர் தேர், அதன் பிறகு குற்றாலநாத சுவாமி தேர், இறுதியாக குழல்வாய்மொழி அம்மை தேர் ஆகிய 5 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.
இந்த 5 தேர்களும் ரத வீதிகளில் சுற்றி நிலையத்தை அடைந்தன. காலை 11 மணிக்கு தேரோட்டம் முடிவடைந்தது. இந்த விழாவில் தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவபூதகனம் வாத்தியங்கள் முழங்க, முதலில் விநாயகர் தேரும், 2 -வதாக முருகன் எழுந்தருளிய தேரும், 3-வதாக நடராசர் எழுந்தருளிய தேரும், 4-வதாக குற்றாலநாதர் எழுந்தருளிய தேரும், 5-வதாக குழல்வாய்மொழி அம்மன் தேரும் ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டதை புத்தாண்டு நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து பலரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருநாள் அன்று காலை 9-மணிக்கு சித்திரை சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 6-ம் தேதி 10-ம் திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து, அதே தினத்தில் காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






