மருத்துவர் பெனடிக் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருடன் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் வெங்கிலி என்ற இடம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது அதிவேகமாக மோதியது. இதில் மருத்துவர் பெனடிக்கும், செவிலியரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் காவல்துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெனடிக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விபத்தில் சிக்கிய செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.