
குழந்தை திருமணம் பெரும்பாலும் தடுக்கப்பட்டாலும் தமிழகத்தின் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமத்தில் வசித்து வரும் குடுகுடுப்பைக்காரர்கள் சிறுமிகளுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைத்து விடுவார்களாம்.
அவர்களின் இந்த வழக்கப்படி அப்பகுதியில் வசிக்கும் 16, 17 வயதாகும் 3 சிறுமிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனை யாரோ ஒரு நபர் சைல்டு லைன் எண்ணான 1098-க்கு அழைப்பு விடுத்து குடுகுடுப்பைக்காரர்கள் குழந்தை திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று நேற்று இரவு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே அந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்துமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டதன் படி அதிகாரிகள் நரசிங்கபுரம் கிராமத்துக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த சிறுமிகள் மற்றும் பெற்றோர்களுடன் பேசி திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், குடுகுடுப்பைக்காரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் விடாமுயற்சியுடன் பெற்றோர்களுக்குப் புரிய வைத்த அதிகாரிகள் அந்த 3 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனையடுத்து, அந்த சிறுமிகளை மீட்டு வேலூர் அரசினர் பெண் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த ஒரே ஒரு போன் கால் 3 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றியுள்ளது.


