சூழ்நிலைகள் சரியான உடன் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்பதால் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த குரூப் 1 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு, குரூப் 4 தேர்வு ஆகியவை கொரோனா தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் நடைபெறுமா என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் சரியான உடன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நிச்சயமாக தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்வு நிச்சயம் நடைபெறும் என்பதால் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள நந்தகுமார், தேர்வுக்கு முன்பு நிச்சயமாக 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையேயும் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.