
குற்றாலத்தில் தற்போது ஆடி மாதத்தில் சீசன் அமர்க்களமாக இருப்பதால் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் அருவிகளில் குளிப்பதற்காக வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் இருக்கும்.தற்போது சீசன் அமர்க்களமாக இருப்பதால் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வேலை நாட்களில் கூட அதிகளவில் உள்ளது.
தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பழவகைகள் மூலிகை மருந்துகள் அதிகளவில் விற்பனை ஆகிறது.அருவி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.




