ஐஎஸ்., பயங்கரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்கள்: மீட்கும் முயற்சியில் அமைச்சர் பயணம்

Published:

isis-terrorist

புதுதில்லி:

ஈராக் நாட்டுக்கு கட்டட வேலைக்குச் சென்ற இந்தியர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் பிணைக்கைதிகளாக இருந்துள்ளனர். மோசூல் நகரம் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கைகளில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், இவர்கள் 39 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை கடைசியாக சர்ச் ஒன்றில் மறைந்திருந்தபோது சிலர் பார்த்துள்ளனர். இவர்கள் 39 பேரையும் விடுவிக்கும் முயற்சியாக, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் தளபதி வி கே சிங் ஈராக் சென்றுள்ளார்.

சிரியா நாட்டின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அத்துடன், அங்கே வசித்து வந்த கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டினர். பின்னர் அங்கே இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக ஈராக் ராணுவம் சில மாதங்களாக உச்சகட்ட தாக்குதலை மேற்கொண்டடு. இதன் விளைவாக மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசமாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளுக்காக அங்கே சென்று வேலை பார்த்த இந்தியர்கள் 39 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர். கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியாமல் அவர்களின் குடும்பத்தார் திண்டாடி வந்த நிலையில், அவர்களில் சிலரை அங்கிருந்த சர்ச் ஒன்றில் பார்த்ததாக சிலர் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், மோசூல் நகரம் முழுவதும் இதுவரை ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடித்தது. தற்போது, மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளது. இதற்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளதுடன், கடத்தப்பட்ட இந்தியர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு ஈராக் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க தயாராக இருப்பதாக ஈராக் அரசும் உறுதி அளித்தது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இன்று ஈராக் நாட்டில் உள்ள எர்பில் நகருக்கு புறப்பட்டார். இந்தத் தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதில் சிக்கிக்கொண்ட 39 பேரில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது குறித்து அம் மாநில முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் தொலைபேசியில் பேசினார்.

அதற்கு அவர், மத்திய அரசும் பல்வேறு வழிகளில் இந்தியர்களைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதி கூறினார்.

Related articles

Recent articles

spot_img