தங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றவர்களின் கொலையில் இந்திய அரசு அமைப்பு உள்ளதாக திடீர் என நேரடியாகக் குற்றம் சாட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி ஏற்படுத்தினார். அது பெரிய அளவில் இந்திய கனட உறவில் விரிசலை ஏற்படுத்தியது. .
ஏற்கெனவே, இந்திய நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் விஷயத்தில் கனடா புகலிடம் கொடுத்து வருவது குறித்து இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டும் நடவடிக்கை எடுக்காமல் ஆதரவளித்து வந்தார் கனட பிரதமர் ட்ரூடோ.
இந்தியாவின் பஞ்சாப்பிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி தொடங்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார்.
கடந்த ஜூன் மாதம், கனடாவின் வான்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார். இதன் பின், கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.
இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்திய விரோதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருகிறது என்பது நிஜமாகிவிட்டது என்று ஒருதரப்பு சொல்ல, தங்கள் நாட்டு பிரஜையை இன்னொரு நாடு கொல்வதா என்று வேறொரு தரப்பு சொல்ல, இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது.
கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது. தொடர்ந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம்.
எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது.
அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்… என்று கூறியுள்ளார்.
எனினும், அவரது பேச்சு, சர்வதேச உறவுமுறை சட்டங்களுக்கு முரணாக, பயங்கரவாதிகளின் புகலிடம் கண்டா என்பதை பட்டவர்த்தனமாக்கி உள்ளது.