மெஹ்ரீன் பிர்சாதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் கோலிவுட் வந்தார். விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனுஷுடன் நடிப்பது குறித்து மெஹ்ரீன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,நான் நடித்த தெலுங்கு படமான எஃப் 2-ஐ பார்த்து தயாரிப்பாளருக்கு என் நடிப்பு பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து என்னை அணுகினார்கள். தமிழ் மொழி சரியாகத் தெரியாது. ஆனால் நிச்சயம் கற்றுக் கொள்ளும் எண்ணம் இருக்கிறது. தற்போது வசனங்களை இந்தியில் எழுதி வைத்துக் கொண்டு தமிழில் பேசுகிறேன்.பட்டாஸ் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடிக்கிறேன். என் கதாபாத்திரம் பற்றி இதற்கு மேல் எதுவும் என்னால் கூற இயலாது. பட்டாஸ் செட்டிபல் அனைவரும் உற்சாகமாக வேலை செய்கிறார்கள். தனுஷ் ஒரு சிறப்பான நடிகர். அனைத்து ஷாட்களையும் ஒரே டேக்கில் முடித்துவிடுகிறார். தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது.காட்சிக்கான வசனங்கள் அடங்கிய பேப்பரை சும்மா பார்த்தாலே அவர் மனதில் நின்றுவிடுகிறது. அவர் நடிக்கும் விதத்தை பார்க்க எனக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது. தமிழ் எனக்கு புது மொழி என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். எதற்கும் பயப்பட வேண்டாம், எல்லாம் சரியாக நடித்துவிடுவீர்கள் என்று தனுஷ் கூறுவார். செட்டில் உள்ள அனைவரும் உதவியாக உள்ளனர் என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.
மெஹ்ரீன், பட்டாஸ் தவிர இரண்டு படங்கள் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு தமிழ் படங்களில் நடித்தும் மெஹ்ரீனுக்கு பிரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் பட்டாஸ் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தனுஷ் போன்ற ஒரு நடிகருடன் நடிப்பதை நினைத்து அவர் பெருமையில் உள்ளார்.