பாடப் புத்தகங்களில் தமிழ் எழுத்துகளில் கூட கவனம் செலுத்தி பிழை இன்றி புத்தகத்தை வெளியிட இயலாத அளவுக்கு தமிழ் உணர்வுள்ள தமிழ்ப் புலிகளாக ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்பது இப்போது சமூகத் தளத்தில் கிண்டல் செய்யப் படும் விவகாரம்!
திராவிடக் கட்சிகளின் கடந்த ஐம்பதாண்டு ஆட்சிக் காலத்தில் நற்றமிழையும் கெடுத்து நாசப் படுத்தியது தான் கண்ட பலன் என்று அங்கலாய்க்கிறார்கள் அறிஞர்கள். அதற்கு எடுத்துக் காட்டாக இந்த வருடம் வெளியான தமிழ்ப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பிழைகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர் சமூகத் தளத்தில்!
இரண்டாம் வகுப்பு புத்தகத்தில் தேசிய கீதத்தில் தவறு இருப்பதாக வெளியான செய்தி இப்போது ஒரு பரபரப்பு!
புதிய பாடத்திட்ட புத்தகத்தில் தேசிய கீதத்தில் உள்ள பிழையை திருத்தம் செய்ய வேண்டும் என்று விவரம் அறிந்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது!
இதன் அடிப்படையில் புத்தகங்களும் பாடங்களும் புதிய வடிவில் புதிய அம்சங்களுடனும் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் சிலர் அலட்சியமாக செயல்பட்டதால் புதிய பாடப் புத்தகங்களில் சில அம்சங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய கீதத்தின் பாடல் வரிகள் தவறாக அச்சிடப் பட்டுள்ளன! இரண்டாம் வகுப்புக்கான முதல் பருவம் கணக்கு மற்றும் சூழலியல் பாடத்துக்கான புத்தகத்தில் தேசிய கீதம் மற்றும் தமிழில் அதன் பொருள் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. இதில் சில வார்த்தைகள் இடம் மாறி பிழையாக இருக்கிறது!
புதிய புத்தகங்களில் பல இடங்களில் எழுத்துப்பிழைகள், பொருள் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன! தேசிய கீதம் பாடல் வரிகளை தவறாக அச்சிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது! இதை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக கவனித்து பிழைகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் ஆசிரியர்கள்.