குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது, தனது மொபைல் போனிலேயே மூழ்கியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. அது ஏன் என்பதற்கு காங்கிரஸார் இப்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.
17வது மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியால் ராகுல் அமைதி இழந்து தவிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று தாம் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரது உரையில் கவனம் செலுத்தாமல் ராகுல் மொபைல் போனில் மூழ்கியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். இதில் பங்கேற்ற ராகுல், சுமார் 24 நிமிடங்கள் மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து அதில் ஏதோ டைப் செய்தார். தொடர்ந்து மொபைல்போனில் படம் பிடித்த ராகுல், 20 நிமிடங்கள் தனது தாயார் சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு சோனியா உள்ளிட்ட எம்.பி.,க்கள் வரவேற்பு தெரிவித்து மேஜையை தட்டினர். ஆனால் ராகுல் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
குடியரசுத் தலைவர் தனது உரையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாலக்கோட் தாக்குதல் இவை பற்றி எல்லாம் குறிப்பிட்டார். அப்போது சோனியா உள்ளிட்டோர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் ராகுலோ எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அவ்வப்போது சோனியா ராகுலை கவனித்தாலும், ராகுலோ அமைதியாக இருந்தார்.
நேரலையில் இவற்றைக் கண்ட பெரும்பாலானோரும் அதிர்ச்சி அடைந்தனர். ஊடகங்களில் இன்று ராகுலின் இந்தச் செய்கைகள் பெரிதும் விவாதிக்கப் பட்டன. இந்நிலையில், ராகுல் ஏன் அவ்வாறு இருந்தார், ஏன் மொபைல் போனை பார்த்துக் கொன்டிருந்தார் என்பதற்கான விளக்கங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் மிகக் கடினமான ஹிந்திச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார் என்றும், அவற்றுக்கான பொருள் தெரியாததால், அந்த வார்த்தைகளை மொபைல் போனில் போட்டு, அவற்றை தேடிக் கொண்டிருந்தார் என்றும் காங்கிரஸார் கூறுகின்றனர்.
Watch LIVE as #PresidentKovind addresses the Joint Sitting of both Houses of Parliament https://t.co/QRVJ3MQEQO
— President of India (@rashtrapatibhvn) June 20, 2019