
— சசிதரூர் —
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று கண்டிக்காத எங்களை போன்றவர்கள் மீது அவர்கள் எரிச்சல் திரும்பி உள்ளது.
அமெரிக்க சொல்லாடலில் இதை ‘வட்டமாக சுற்றி சுடுவது’ என்பார்கள். அதாவது தங்களை தாங்களே சுட்டுக் கொள்வது. இந்தியா உயர்ந்த தார்மீக பீடத்தில் ஏறிக்கொண்டு, இது சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவது என்று கூறி நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நான் முதலில் சில விஷயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன் : சர்வதேச சட்டங்களின்படி இந்த போரை நியாயப்படுத்த முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பிற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது ,இறையாண்மை மதிக்க வேண்டும், பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா எப்போதும் வலியுறுத்தும் விஷயங்களுக்கு இது முரணானது . நான் ஏற்கனவே சொன்னது போல், தற்காப்பு நடவடிக்கையாக முன் கையெடுத்து தாக்குவது என்றும் இதை சொல்ல முடியாது.
ஈரானின் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது நாம் உடனடியாக இரங்கலை தெரிவித்தோம். அதேபோல் இப்போது ஈரானின் உச்சப்பட்ச தலைவர் கொல்லப்பட்டபோது உடனடியாக நமது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். இதைச் சொல்ல எனக்கு சுதந்திரம் உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியில் இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட எனது நண்பர்களுக்கும் இருக்கிறது. ஆனால் , இந்திய அரசு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் அமைதி காப்பதை நான் கண்டனம் செய்ய மாட்டேன்.
எப்போதுமே இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் கொள்கைகளையும் நிதர்சனத்தையும் கருத்தில் கொண்டு, இரண்டையும் சமன்படுத்தும் விதமாகவே இருந்துள்ளன. ஜவஹர்லால் நேருவின் அணிசேரா கொள்கை என்பது தார்மீக நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் தவிர்த்தது அல்ல. மாறாக இரு துருவ பனிப்போரில் சிக்கிக் கொள்ளாமல் தவிப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் இருப்பையும் தக்க வைத்துக் கொண்ட சாதுர்யம்.
உலகம் இன்று பல அதிகார மையங்களை கொண்டதாக மாறியுள்ளது. எதிர் எதிரான சக்திகளுடன் ‘பல்முனை உறவை’ இந்தியா பேணி வருகிறது. நம் தேச நலனை முக்கியமாக கொண்டு சில நேரங்களில் கடுமையான நிலைப்பாட்டையும் மேற்கொள்கிறது.
குறிக்கோள் மாறாமல் இருக்கிறது :
உலகில் நீதி நியாயத்தை பேசும் அதே வேளையில் இந்தியாவின் இறையாண்மையை காத்துக் கொள்ள வேண்டும். தேசபக்தியை யாருக்கும் மொத்த குத்தகைக்கு விடவில்லை. காந்தி , நேரு சொல்லித்தந்த பண்புகளை விளக்கம் அளிக்கும் உரிமை எந்த ஒரு சாராருக்கு மட்டும் இல்லை. அவர்கள் சொன்ன குணங்களை நம் காலத்து சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தி செயல்படுவதே நாம் அவர்களது வாரிசுகள் என்பதற்கு உண்மையான அடையாளம். நம் நாட்டு நலன்களை காவு கொடுத்துவிட்டு சுயபரித்தியாகம் செய்ததாக சொல்லிக் கொள்வதில் இல்லை.
தேச நலனும் நெறி சார்ந்த விழுமியங்களும் முரண்படும்போதெல்லாம் இந்தியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளதை இன்று விமர்சனம் செய்பவர்கள் வசதியாக மறந்து விட்டனர். 1956 இல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் அப்பட்டமான அத்துமீறலை நாம் கண்டனம் செய்யவில்லை. அதேபோல் 1968 ல் செக்கோஸ்லோவாகியாவிலும் 1979 இல் ஆப்கானிஸ்தானிலும் நடந்தபோது நாம் அமைதியாக இருந்தோம். அது ஏன் ?
ஏனெனில் நாம் தார்மீக நிலைப்பாட்டை மேற்கொண்டால் அது மாஸ்கோவுடன் நமக்கு இருக்கும் நல்லுறவை சிதைத்து விடும் என்று சரியாக கணித்தோம். சோவியத் யூனியன் நமக்கு முக்கியமான ஆயுத வியாபாரி. ராஜதந்திர நிலைப்பாடுகளில் நமக்கு கூட்டாளி. மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க சரியான மாற்று.
அமைதியாக இருந்ததன் மூலம் நாம் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரித்ததாக அர்த்தம் இல்லை. எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதற்கான விலை என்ன என்பதை புரிந்து கொண்டோம். அதனால் ஆவேசமான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இன்று உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு , ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலிலும் அதே வாதத்தின் நீட்சியாக நம் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவில் மட்டுமல்ல, ஈரானிய ஏவுகணைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள வளைகுடா நாடுகளிலும் நமக்கு ஏராளமான பணயம் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 200 பில்லியன் டாலருக்கு இந்த பகுதியில் நாம் வர்த்தகம் செய்து வருகிறோம். நமது எரிசக்தி தேவை வளைகுடா எண்ணெய் , இயற்கை எரிவாயுவை சார்ந்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் வசிக்கும் ஒன்பது மில்லியன் இந்தியர்களின் நலன் அந்த பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடையது.
ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போரை தார்மீக அடிப்படையில் கண்டனம் செய்வதாக பாசாங்கு செய்தால் அவர்களுடனான நமது உறவு பாதிக்கப்படும். அது மட்டுமன்றி அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் சம்பள பணம் – இதுதான் பல லட்சம் இந்திய குடும்பங்களுக்கு ஆதாரமாக உள்ளது, நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான எரிசக்தி, நம் வளர்ச்சிக்கு ஆதாரமான வர்த்தகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் அமைதியாக இருப்பது கோழைத்தனம் அல்ல. நம்முடைய தேச நலனும் அந்த பிராந்திய நிதர்சனங்களும் சிக்கல்களும் பின்னி பிணைந்துள்ளன என்பதை புரிந்து கொண்ட தெளிவை காட்டுகிறது.
வாஷிங்டனின் உள்ள அரசின் இயல்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள ஐக்கிய அமெரிக்கா நாம் எதிர்பார்ப்பது போல சர்வதேச சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன் நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்களை விளாசத் தயங்குவதில்லை. போரானது இதுவரை நாம் மேற்கொண்ட நெறிகளுக்கு முரணாக இருக்கிறது என்றாலும் அமெரிக்காவுடன் நமக்கு இருக்கும் வேறு பல ஆதாயங்களை காவு கொடுப்பது அறிவார்ந்தது அல்ல.
சீனாவின் வளர்ச்சியினால் நமக்கு எழுந்துள்ள கவலைகள் எல்லாம் அமெரிக்காவின் ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்பக் கூட்டு, உறுதியான நட்புறவை பக்கபலமாக சார்ந்துள்ளோம். ஈரான் போரில் நெறி சார்ந்த நிலைப்பாட்டை மேற்கொண்டு அமெரிக்காவை முறைத்துக் கொண்டால் அது நம்முடைய முக்கியமான நலன்களை இழப்பதற்கு ஈடாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அயலுறவு கொள்கை என்பது நம்முடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்வதும், நம் நலன்களை முன்னெடுத்துச் செல்வதும், அமைதியை நிலை பெற செய்வதற்குமானது.
இப்போது தார்மீக உயர்நிலைப்பாட்டை மேற்கொள்வது நம்முடைய நலன்களுக்கு உகந்தது அல்ல. அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்ள முடியும் என்றால் அந்த நிலையை மேற்கொள்ளலாம். ஆனால் இன்று நம்மால் அந்த நிலையை மேற்கொள்ள இயலாது.
யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடப்பது என்றால் வேறு எவரையோ பின்பற்றுவதாகாது. பல பன்னாட்டு அரங்குகளில் இந்தியா உலக நீதியை பலமுறை பேசியுள்ளது. ஆனால் எப்போது நம் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். சமநிலையை பேணும் இந்த புரிதல் பொறுப்பான அரசியல் களமாடலில் அவசியம்.
ஆதாயம் அற்ற சூழ்நிலையில் அமைதியாக இருப்பது விவேகமானது. அது நம்முடைய நலன்களை பாதுகாக்கும் என்பது மட்டுமின்றி தேவைப்படும் போது அமைதியாக ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாகும். தேவையற்ற மோதலை தவிர்த்து உரிய நேரத்தில் இரண்டு தரப்பினரிடையே பேசி அமைதி திரும்ப வழிவகை காண இயலும். அதற்கு நாம் ஊடகமாக இருக்க முடியும்.
போரை கண்டனம் செய்ய வேண்டும் என்று கேட்கும் இந்திய முற்போக்காளர்கள் நெறி சார்ந்த நிலைப்பாட்டை தார்மீக தைரியம் என்று தவறாக புரிந்து வைத்துள்ளார்கள். அயலுறவு கொள்கை என்பது வகுப்பறையில் பாடம் எடுப்பது அல்ல. இதை மறந்து விடக்கூடாது. அது அதிகாரமும் கொள்கைகளும் எதிரெதிரே நிற்கும் போட்டி அரங்கம். அந்த களத்தின் விளைவுகள் பல கோடி உயிர்களை, வாழ்க்கையை பாதிக்க கூடியவை. இதை கருத்தில் கொள்ளாமல், கண்டனம் செய் என்று அடுக்குமொழியில் அலற்றுவது பொறுப்பின்மையின் உச்சமாகும்.
நாம் தார்மீக சக்தியின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று காந்தி சொல்லித் தந்துள்ளார். சர்வதேச சட்டங்கள்தான் அமைதியின் ஊற்றுக்கண் என்று நேரு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் நம் தேச நலன் முக்கியம் என்பதையும் புரிந்து கொண்டவர்கள். அவர்களது வாரிசுகள் இறுகிய பற்றாளர்கள் இல்லை. மாறாக , சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களது கூற்றை நடைமுறைப்படுத்துபவர்கள்.
ஈரான் மீது நடக்கும் போரை சர்வதேச சட்டங்களால் நியாயப்படுத்த முடியாது. இந்தியா அமைதியாக இருப்பதால் போரை அது ஆதரிப்பதாக கருதக்கூடாது. நம் தேச நலனை பற்றி புரிந்து கொண்ட செயலறிவு முக்கியமே அன்றி நெறி சார்ந்த நிலைப்பாடல்ல.
இந்திய அரசுக்கு நான் ஆலோசனை கூற வேண்டுமென்றால், அது எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும், அடக்கி வாசியுங்கள் என்றுதான் கூறுவேன். நம்மை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருப்பதே பலம். கொள்கையையும் யதார்த்தத்தையும் சமன் செய்வதே வலிமை. நம்முடைய நலன்களை பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய விழுமியங்களை மதிப்புறச் செய்ய வேண்டும். ஆபத்தான உலகில் அறிவின் துணையுடன் பயணிக்க வேண்டுமே அன்றி போலி துணிச்சலுடன் தற்பெருமையோடு எதிர்கொள்ளக்கூடாது.
புவிசார் அரசியல் நிதர்சனங்களை புரிந்து கொண்டு , இந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படும் விளைவுகளை எடை போட்ட பிறகு, விவேகமான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் அரசு ‘சரணாகதி அடைந்த’ அரசு அல்ல. பொறுப்பை உணர்ந்த சாதுரியமாக அரசு.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.
அயலுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்.




