மராடுவிலுள்ள எச் 2 ஓ ஹோலி ஃபெய்த் அடுக்குமாடி கோபுரம் வெடி வைத்து தகர்ப்பு!

Published:

kerala 1 - 2026

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே.. கேரளாவில் 19 மாடிகளையுடைய அடுக்கு மாடிக் குடியிருப்பு வெடி வைத்து தகர்க்கப்பட்டு விட்டது. மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று ஒரு கட்டடம் தகர்க்கப்பட்டது.

கேரள மாநிலம், கொச்சியில் உள்ளது மரடு பகுதி.. இங்கு கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன.

kerala - 2026

இந்த குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டும் ஹெச் டூஓ ஹோலி பெய்த், ஆல்பா செரைன், ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் வெடி வைத்து இடிக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்த கட்டிடத்தை இடிப்பதற்கான பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், குடியிருப்பை இடிக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியது. காலை 8 மணிக்கே, குடியிருப்புகளை இடிக்கும் பணியை மேற்கொள்ளும் குழுவும், அதிகாரிகளும் அங்கு வந்துவிட்டனர்.

முன்னதாக, அந்த பகுதியின் அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. அது மட்டுமல்ல.. எல்லோருமே அந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறி விட்டனரா என்று காவல்துறையினர் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனையிட்டனர். எல்லா வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதேபோல, வீட்டில் எந்த எலக்ட்ரிக் பொருட்கள் இருந்தாலும் அதை அணைத்துவிட்டு போகும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
ஒருவேளை ஆளில்லா விமானங்கள் பறந்தால் அதை சுட்டு வீழ்த்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இத்தனை ஏற்பாடுகளுக்குப் பின்னர் இன்று முதல் கட்டடம் சற்று முன்பு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் உள்நோக்கி இடிந்து விழும் தொழில்நுட்பம் மூலம் இடிக்கப்படுகின்றன. முதல் கட்டடமும் அவ்வாறே இடிக்கப்பட்டது. 9 விநாடிகளில் முதல் கட்டடம் பொலபொலவென்று நொறுங்கி விழுந்து அந்த இடமே புகை மண்டலமானது.

3 முறை சைரன் ஒலிக்க விடப்பட்டு முதல் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது 2வது கட்டடம் இடிக்கப்படவுள்ளது. நாளையும் இப்பணி தொடரவுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img