பனாஜி:
கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவா சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் இருந்து இங்கே பயணிகள் வருகின்றனர். எனவே, கோவாவை தூய்மையாக வைத்திருக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார். கடைகளுக்கு செல்லும் மக்கள் துணிப் பைகளை பயன்படுத்தும் பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வார்களெனில் மாநில அரசால் திறம்பட செயல்பட முடியாது. அரசு தூய்மையான நகரங்களை வழங்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். எனினும், சாலையில் குப்பைகளை நாம் தூக்கி எறிகிறோம். நெடுஞ்சாலைகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு பணிமனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்.
பொதுமக்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வரும் ஜூலை மாதத்தில் இருந்து யாரேனும் பிளாஸ்டிக் பைகள் விற்பது அல்லது வாங்குவது தெரிய வந்தால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டும். அது சிறிய தொகையாக இருக்காது. பெருந்தொகையாக இருக்கும். அபராதத் தொகை ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். தொடக்கத்தில் அபராத தொகையில் தளர்வு இருந்தாலும், பின்னர் தடையை கடுமையாக அமல்படுத்த இருக்கிறோம்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இத்திட்டத்தினை தொடக்கத்தில் சிலர் கிண்டல் செய்தனர். ஆனால், பொதுமக்கள் தற்பொழுது இதுபற்றி பேசி வருவதுடன், இத்திட்டத்திற்காக பணியாற்றியும் முன் வருகிறார்கள் என அவர் கூறினார்.