ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைகளுக்கும் தயாராக உள்ளோம் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.
விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது என கூறிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் சிறப்பாக அளிக்கப்பட்டன என்றார். மேலும், ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க பிரதாப் ரெட்டி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சையே அளிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து விசாரிக்க தற்போது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அதிமுக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மை தான். ஆனால் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்த விபரம் விசாரணை கமிஷனிடம் தெரிவிக்கப்படும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமிராக்கள் ஏதும் இல்லை. சிகிச்சைக்கான வீடியோ காட்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் மருத்துவமனை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் உள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு குறித்த முழு விவரம் உள்ளது. அதிமுக அமைச்சர்களின் பல்வேறு கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஜெயாலலிதா கைரேகை வைத்தது குறித்த விவரங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்போம். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த அனைத்து பதிவுகளும் உள்ளன. அப்பல்லோ தரப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


