
செப்.21 அன்று மாலை 5 மணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்
தமிழ் வடிவம்
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வணக்கம்.
நாளையிலிருந்து, சக்தியை உபாசிக்கும் புனிதவேளை, நவராத்திரி தொடங்க இருக்கிறது. உங்கள் அனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி, தேசம், தற்சார்பு பாரதம் இயக்கத்திற்காக, மேலும் ஒரு, மகத்துவம் வாய்ந்த, மற்றும் பெரிய அடியை முன்னெடுக்கிறது. நாளை, அதாவது நவராத்திரியின்…. முதல் நாள்,
செப்டம்பர் 22ஆம் தேதியன்று, சூரிய உதயத்தோடு கூடவே, அடுத்த தலைமுறை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், அமலுக்கு வந்துவிடும். ஒருவகையிலே பார்த்தால், நாளைமுதல் தேசத்திலே, ஜிஎஸ்டி…. சேமிப்புக் கொண்டாட்டம், தொடங்கப்பட இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டத்திலே, உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். மேலும் நீங்கள், உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை, மேலும் எளிதாக வாங்கி அனுபவிக்க முடியும்.
நம்முடைய தேசத்தின் ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள், புதிய மத்தியத்தட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர், அனைவருக்கும், இந்தச் சேமிப்புக் கொண்டாட்டத்தால், நிறைய ஆதாயங்கள் கிடைக்கும்.
அதாவது, இந்தப் பண்டிகைகள் காலத்தில், அனைவருக்கும் இனிப்பான செய்தியாகும். தேசத்தின் ஒவ்வொரு குடும்பத்தின், சந்தோஷங்கள் அதிகரிக்கும். நான் தேசத்தின், கோடானுகோடி குடும்பத்தவர்களுக்கும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், மற்றும், இந்த சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்விருப்பங்களைத் தெரிவிக்கிறேன், நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
இந்தச் சீர்திருத்தங்கள், பாரதத்தினுடைய, வளர்ச்சிப் பயணத்திற்கு, மேலும் வேகம் கூட்டும். தொழில்களை, மேலும் சுலபமானதாக ஆக்கும். முதலீடுகளை, மேலும் கவரக்கூடியதாக இருக்கும். மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், வளர்ச்சிக்கான ஓட்டத்திலே, சமமான களம் அமைத்துக் கொடுக்கும்.
நண்பர்களே, 2017ஆம் ஆண்டிலே, பாரதமானது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நோக்கி முன்னேறியது. அது ஒரு பழைய சரித்திரத்தை மாற்றுவதற்கும், ஒரு புதிய சரித்திரத்தை இயற்றவும், தொடக்கமாக அமைந்தது.
பல பத்தாண்டுகள் வரை, நமது தேசத்தின் மக்கள், நீங்கள் அனைவரும், நமது வியாபாரிகள், தனித்தனி வரிகள் என்ற வலையில் சிக்கியிருந்தார்கள். ஆக்ட்ரோய், நுழைவு வரி, விற்பனை வரி, சுங்க வரி, வேட், சேவைவரி, இப்படி நினைவில் வைக்க முடியாத அளவுக்கு, டஜன்கணக்கான வரிகள், நம் தேசத்திலே இருந்தன. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகருக்கு, பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், எத்தனை சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பது மலைக்க வைக்கும்.
ஏராளமான படிவங்களை நிரப்ப வேண்டியிருக்கும். எத்தனையோ தடைகள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும், வரிகளுக்கான விதவிதமான விதிகள் இருந்தன. எனக்கு நினைவிருக்கிறது. 2014ஆம் ஆண்டிலே, தேசம் எனக்கு, பிரதம மந்திரி பொறுப்பை அளித்த போது, அப்போது அந்தத் தொடக்கக்கட்டத்திலே, ஒரு அயல்நாட்டு செய்தித்தாளிலே, ஒரு சுவாரசியமான எடுத்துக்காட்டு பிரசுரம் ஆகியிருந்தது.
அதிலே, ஒரு கம்பெனியின் கஷ்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனி கூறியிருந்தது, அதற்கு ஒருவேளை, பெங்களூருவிலிருந்து, 570 கி.மீ. தொலைவில் இருக்கும், ஹைதராபாதுக்கு, தனது பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால், அந்த அனுப்புதல், எத்தனை கடினமானது என்றால், அவர்கள்…. சிந்தித்தார்கள், அவர்கள் சொல்லவும் செய்தார்கள், அந்தக் கம்பெனி என்ன விரும்பியது என்றால், முதலில் தங்களுடைய பொருட்களை, பெங்களூருவிலிருந்து ஐரோப்பா அனுப்பிய பிறகு, அதே பொருட்களை, ஐரோப்பாவிலிருந்து ஹைதராபாத் அனுப்பலாம் என்று.
நண்பர்களே, வரி மற்றும் சுங்கம் என்ற பெரும் வலை காரணமாக, அப்போது இந்த நிலைமை இருந்தது. நான் உங்களுக்கு ஒரேஒரு, பழைய எடுத்துக்காட்டை மட்டுமே நினைவூட்டுகிறேன். அப்போது இப்படி இலட்சக்கணக்கான கம்பெனிகளுக்கு, இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கு, தனித்தனி வரிகள் என்ற பெருவலை காரணமாக, அன்றாடம் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. சரக்குகளை, ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு இடையே, அதிகரித்த செலவினங்கள், அதையும் கூட, ஏழைகள் சுமக்க வேண்டியிருந்தது, உங்களைப் போன்ற, நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்தது.
நண்பர்களே, தேசத்தை, இந்த நிலையிலிருந்து வெளியேற்றுவது, மிகவும் அவசியமாக இருந்தது. ஆகையினாலே, எங்களுக்கு நீங்கள், 2014இலே சந்தர்ப்பம் அளித்தீர்கள், நாங்கள் அப்போது, மக்கள் நலனிலே, தேச நலனிலே, ஜிஎஸ்டியை எங்களுடைய முதன்மையாகக் கொண்டோம். நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கலந்தாலோசித்தோம். நாங்கள் அனைத்து மாநிலங்களின், அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தோம்.
ஒவ்வொரு சிக்கலுக்கான தீர்வையும் தேடினோம். அனைத்து மாநிலங்களையும், அனைவரையும், ஒன்றிணைத்த பிறகு, சுதந்திர பாரதத்தின் இத்தனை பெரிய, வரிச்சீர்திருத்தம், சாத்தியமாகியிருக்கிறது. இந்த மத்திய, மற்றும் மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிகளின் விளைவாகவே, நமது தேசம், பலடஜன் வரிகளின் சுமையிலிருந்து விடுதலை அடைந்தது. இதனால் தான் தேசம் முழுவதற்கும், ஒரே மாதிரியான அமைப்பு உருவானது. ஒரு தேசம், ஒரு வரி.. என்ற கனவு மெய்ப்பட்டது.
நண்பர்களே, சீர்திருத்தம் என்பது இடையறாது நடக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும். காலம் மாறும் போது, தேசத்தின் தேவைகள் மாறும் போது, அப்போது அடுத்ததலைமுறை சீர்திருத்தங்களும், அதே அளவுக்கு அவசியமானதாகிறது. ஆகையாலே, தேசத்தின் தற்போதைய தேவைகள், மற்றும் வருங்காலத்தின் கனவுகளை மனதில் கொண்டு, ஜிஎஸ்டியின்… இந்தப் புதிய சீர்திருத்தங்கள், அமலுக்கு வருகின்றன.
புதிய வடிவத்திலே, மேலும் முக்கியமாக, இப்போது வெறும், 5 சதவீதம், மற்றும் 18 சதவீதத்திற்கான வரி அடுக்கு இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள், மேலும் விலை மலிவாகிவிடும். உணவுப் பொருட்கள், மருந்துகள், சோப்பு, பிரஷ், பற்பசை, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு, இப்படி பல பொருட்களும், இப்படி பல சேவைகளும், ஒன்று, வரி இல்லாமல் இருக்கும், அல்லது வெறும், 5 சதவீத வரி செலுத்த வேண்டியதாக இருக்கும்.
எந்தப் பொருட்களின் மீது முன்பெல்லாம், 12 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்ததோ, அவற்றிலிருந்து, 99 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 100க்கு பக்கமாக, 99 சதவீதப் பொருட்கள் இப்போது, 5 சதவீத வரி வரம்பிற்குள் வந்து விட்டன.
நண்பர்களே, கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்திலே, 25 கோடி நாட்டுமக்கள், ஏழ்மையை தோற்கடித்திருக்கிறார்கள், ஏழ்மையை விரட்டியிருக்கிறார்கள், மேலும் ஏழ்மையிலிருந்து வெளியேறிய இந்த, 25 கோடி மக்கள் என்ற பெரிய சமூகம், புதிய மத்தியத்தட்டு என்ற வடிவிலே, இன்று நமது தேசத்திலே, மிகப்பெரிய பங்களிப்பு அளித்து வருகிறார்கள்.
இந்தப் புதிய மத்தியத்தட்டு மக்களுக்கு என, பிரத்யேகமான பேரார்வங்கள் இருக்கின்றன. அவர்களுக்கென கனவுகள் இருக்கின்றன. இந்த ஆண்டு, அரசாங்கம், 12 இலட்சம் வரையிலான வருமானத்திற்கு, வரிவிலக்கு அளித்து, ஒரு பரிசினை அளித்திருக்கிறது. மேலும் சொல்ல வேண்டுமென்றால், 12 இலட்சம் ரூபாய் வருவாய் வரை, வருமான வரியில் விலக்கு கிடைத்தால், மத்தியத்தட்டு மக்களின் வாழ்விலே எத்தனை பெரிய மாறுதல் ஏற்படுகிறது!!
எத்தனை எளிமையாகவும் வசதியாகவும் ஆகிறது!! மேலும் இப்போது, ஏழைகளுக்கான முறை இது; புதிய மத்தியத்தட்டுக்கான முறை இது. இப்போது ஏழைகளுக்கும், புதிய மத்தியத்தட்டு மக்களுக்கும், மத்தியத்தட்டு மக்களுக்கும், ஒரு வகையிலே, இரட்டை வெகுமதி கிடைத்திருக்கிறது. ஜிஎஸ்டி குறைவானபடியால், இப்போது தேசத்தின் குடிமக்களுக்கு, தங்களுடைய கனவுகளை மெய்யாக்குவது, மேலும் சுலபமானதாக ஆகும்.
வீடு கட்டுதல், தொலைக்காட்சி, குளிர்சாதனங்கள், வாங்குவதாகட்டும்; ஸ்கூட்டர், பைக், கார் வாங்குவதாகட்டும்; இவை அனைத்தின் மீதும், இப்போது, குறைவாகவே செலவழிக்க வேண்டியிருக்கும். உங்களுக்கெல்லாம், சுற்றுலா சென்று வருவது கூட மலிவாகி விடும். ஏனென்றால், அதிக அளவு ஹோட்டல்களின் அறைகளுக்கும் கூட, ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு விட்டது.
அதே போல நண்பர்களே, எனக்கு ஒன்று சந்தோஷமளிக்கிறது. அதாவது கடைக்கார சகோதர சகோதரிகளும் கூட, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாக மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் ஜிஎஸ்டியில் ஏற்பட்டிருக்கும் விலைக்குறைப்பை, நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் எல்லாம் முந்தைய, மற்றும் இப்போதைய அடுக்குபற்றி, பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, நாம், நாகரிக் தேவோ பவ, குடிமக்களே நம் தேவர்கள், என்ற மந்திரத்தை அடியொற்றி முன்னேறி வருகிறோம், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களிலே, இதனை நாம் தெளிவாகப் பார்க்க முடியும். நாம், வருமான வரியிலே விலக்கு, மற்றும் ஜிஎஸ்டியில் விலக்கு இரண்டையும் இணைத்துப் பார்த்தால், ஓராண்டிலே, எடுக்கப்பட்ட தீர்மானத்தால், இதனால் தேசத்தின் மக்களுக்கு, இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சேமிப்பு ஏற்படும். ஆகையால் தான் நான் இதை சேமிப்புக் கொண்டாட்டம் என்று கூறுகிறேன்.
நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வேண்டினால், நாம் தற்சார்பு பாரதம் என்ற பாதையிலே பயணித்தே ஆக வேண்டும். மேலும் பாரதத்தை, தற்சார்பு உடையதாக ஆக்க, மிகப்பெரிய பொறுப்பு, நம்முடைய எம் எஸ் எம் ஈக்கள், அதாவது, நமது சிறு, மத்திய, மற்றும் குடிசைத் தொழில்களின் மீதும் இருக்கின்றது. எவை நாட்டுமக்களின் அத்தியாவசியத் தேவைகளோ, எவற்றை நாம் தேசத்திலேயே தயாரிக்க முடியுமோ, அவற்றை நாம், தேசத்திலேயே தயாரிக்க வேண்டும்.
நண்பர்களே, ஜிஎஸ்டியின் அடுக்குகளைக் குறைத்ததால், விதிகள், மற்றும் செயல்முறைகள், மேலும் சுலபமாக ஆனதால், நமது எம் எஸ் எம் ஈக்கள், நமது சிறு தொழில்கள், குறு தொழில்கள் ஆகியவற்றுக்கு நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். அவற்றின் விற்பனை அதிகரிக்கும், வரிகள் குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும்; அதாவது, அவர்களுக்கும் கூட, இரட்டிப்பு ஆதாயம் கிடைக்கும். ஆகையால், இன்று என்னுடைய, எம் எஸ் எம் ஈக்களிடம், சிறு தொழிலாகட்டும், குறு தொழிலாகட்டும், குடிசைத் தொழிலாகட்டும், உங்கள் அனைவரிடத்திலும், அதிக அளவு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கும் தெரியும்,
பாரதம், வளமையின் சிகரத்தின் மீது இருந்த போது, அப்போது, பாரதத்தின் பொருளாதார அமைப்பின் முக்கியமான ஆதாரமாக, நமது, எம் எஸ் எம் ஈக்களே இருந்தன, நமது சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் இருந்தன. பாரதத்தின் தயாரிப்புத் துறை, பாரதத்தில் உருவாக்கப்பட்ட பொருட்களின், தரம் சிறப்பானதாக இருந்தது. நாம் அந்த கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டும். நமது சிறு தொழில்கள் தயாரிப்பவை, அவை உலகிலே, அனைத்து உரைகற்களிலும், சிறப்பானவையாக இருக்க வேண்டும், மிக அருமையானவையாக இருக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பொருட்கள், அவை உலகிலே, அட்டகாசமான முறையிலே, மிகச் சிறப்பான பொருளுக்கான அடையாளமாக இருக்க வேண்டும். நமது பொருட்களின் தரம், உலகிலே, பாரதத்தின் அடையாளத்தை உயர்த்த வேண்டும், பாரதத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும், நாம் இந்த இலக்கை ஏந்திப் பணியாற்ற வேண்டும்.
நண்பர்களே, தேசத்தின் விடுதலைப் போருக்கு, எப்படி சுதேசி என்ற மந்திரத்தால் பலம் கிடைத்ததோ, அதே போல, தேசத்தின் வளமைக்கும் கூட, சுதேசி என்ற மந்தித்தால் மட்டுமே சக்தி கிடைக்கும். இன்று, அறிந்தோ அறியாமலோ, நமது அன்றாட வாழ்க்கையிலே, நிறைய அந்நியப் பொருட்கள் இணைந்து விட்டன, நமக்கு இது தெரியக்கூட இல்லை. நம் பையில் இருக்கும் சீப்பு, அயல்நாட்டதா அல்லது நம் நாட்டதா நமக்குத் தெரியாது.
நாம், இவற்றிலிருந்தும் கூட விடுபட்டாக வேண்டும். நாம் வாங்கும் பொருட்கள் எல்லாம், இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டும்; இதிலே, நமது தேசத்தின் இளைஞர்களின் உழைப்பு இருக்க வேண்டும், நமது தேசத்தின் சகோதர சகோதரிகளின் வியர்வை இருக்க வேண்டும். நாம், அனைத்து இல்லங்களையும், சுதேசியின் அடையாளமாக ஆக்க வேண்டும். அனைத்துக் கடைகளையும், சுதேசியால் அழகுபடுத்த வேண்டும். பெருமையோடு கூறுங்கள், இது சுதேசி என்று; பெருமையோடு சொல்லுங்கள், நான் சுதேசியையே வாங்குகிறேன் என்று; நான் சுதேசிப் பொருட்களை, விற்கவும் செய்கிறேன் என்று, இதுவே, அனைத்து பாரதீயர்களின் உணர்வாக ஆக வேண்டும்.
எப்போது இப்படி நடக்கிறதோ, அப்போது பாரதம் விரைவாக வளர்ச்சி அடையும். நான் இன்று, அனைத்து மாநில அரசுகளிடமும் கேட்டுக் கொள்கிறேன், தற்சார்பு பாரதத்தின் இந்த இயக்கத்தோடு கூடவே, சுதேசியின் இந்த இயக்கத்தோடு கூடவே, தங்களுடைய மாநிலங்களிலே, தயாரிப்புத் துறைக்கு விரைவு கூட்டுங்கள், முழுச் சக்தியோடு, முழு உற்சாகத்தோடு இணையுங்கள். முதலீடுகளுக்கான சூழலை அதிகரியுங்கள், மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து முன்னேறும் போது, தற்சார்பு பாரதம் என்ற கனவு நிறைவைக் காணும், பாரதத்தின் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும், பாரதம் வளர்ச்சி அடையும்.
இந்த உணர்வோடு கூடவே, நான் மீண்டும் ஒரு முறை, இந்த சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
ஒரு முறை மீண்டும், உங்கள் அனைவருக்கும், நவராத்திரிக்கான, ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டத்திற்கான, பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.





