
ஆமதாபாத்:
தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரத்தில், அவர் மீது தொடரப்பட்ட விதிமீறல் வழக்கை குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குஜராத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி ஒன்றுக்கு அருகே பிரதமர் மோடி நின்றுகொண்டு தங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையுடன் பேட்டியளித்தார். மேலும் அவர் தாமரையுடன் ‘செல்பி’ புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமீறல் என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குழு ஒன்று, இதில் நடத்தை விதிமீறல் இல்லை என அறிக்கை அளித்தது.
எனினும் இதை எதிர்த்து நிஷாந்த் வர்மா என்ற ஆம் ஆத்மி தொண்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகாரை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிஷாந்த் வர்மா மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா, மனுதாரரின் வழக்கு தகுந்த நடைமுறைகளின் படியே கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனவும் கூறி தள்ளுபடி செய்தார்.


