இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பால், பங்குச் சந்தை சரிந்தது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக போர், மற்றும் சர்வதேச காரணிகளால் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்த சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை இன்று வர்த்தக நேரத்தின் போது மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சமாக 36,902 புள்ளிகளை தொட்டது. பின்னர் 36,825 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 49 புள்ளிகள் உயர்வுடன் 11,134 புள்ளிகளில் நிறைவடைந்தது.
பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மோடி அரசு தோற்கடித்தது போன்ற சில காரணங்களால் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பங்குகளை வாங்கினர். இது பங்குச் சந்தையில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.