உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர், கிழக்கு தில்லி பகுதியில் பட்டாசு வெடித்த நபர் மீது தில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
கிழக்கு தில்லியில் காஸிபூர் பகுதியில் குடும்பத்துடன் வசிப்பவர் தாமன்தீப்(35). இவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர் தீனபந்து. கடந்த வியாழன் அன்று தாமன்தீப் தொடர்ச்சியாக பட்டாசுகளை வெடித்து பிரச்னையை ஏற்படுத்தியதாக தீனபந்து குடும்பத்தினர் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தாமன்தீப் மீது இந்திய தண்டனை சட்டம் 188 வது பிரிவின்( அரசு அலுவலர் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுதல்) கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான்!