புது தில்லி: கஜா புயல் உருவானதைத் தொடர்ந்து நவ.15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப் பட்டுள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் ஞாயிறு காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் கஜா புயல் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா நோக்கி நகரக் கூடும். பின்னர் வலுவிழந்து தென் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு அருகே நவ.15 ஆம் தேதி கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக நவ.14 ஆம் தேதி, தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் கன மழையும், நவ.15 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிக கனத்த மழை முதல் கனத்த மழை பெய்யக்கூடும்.
நவ15 ஆம் தேதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். நவம்பர் 16 முதல் 18 வரை தமிழகம், கேரளா, ஆந்திர கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்,
தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது…. என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இருப்பினும், இது குறித்து விளக்கம் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தமிழகத்துக்கு விடுக்கப் பட்ட ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலானது என்றார்.




