புதையல் எடுக்க சென்று; பிணமான வங்கி ஊழியர்….!

Published:

gggg - 2026புதையலை தேடி காட்டுக்குள் சென்ற வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக வேலைபார்த்து வருபவர் கட்டா சிவக்குமார். இவரது நண்பர் கிருஷ்ணாநாயக்.

இவர்களுக்கு குண்டூர் மாவட்டம் முல்லிங்கியை சேர்ந்த சாமியார் ஒருவரிம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம், பிரகாசம் மாவட்டம் நாகெல்லமுடிபி – தாடிவாரி பள்ளி கிராமங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் உள்ள பெரிய மலைக்குன்றில் மன்னர் காலத்து புதையல் இருப்பதாக சாமியார் கூறியுள்ளார்.

இதை கட்டா சிவக்குமார், கிருஷ்ணாநாயக் ஆகியோர் நம்பினர். இதையடுத்து 3 பேரும் புதையலை எடுக்க முடிவு செய்தனர். சிவக்குமார், கிருஷ்ணாநாயக் தங்களது குடும்பத்தினரிடம் சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சாமியாருடன் கடந்த 12-ந்தேதி காட்டுக்கு புறப்பட்டனர்.

2 நாட்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து சென்று மலையடிவாரத்தில் தங்கினர். அதன்பின் வெயில் காரணமாக மலை ஏற முடியாமல் சோர்வடைந்தனர்.

மேலும் உணவு, தண்ணீர், தீர்ந்துவிட்டதால் ஊருக்கு திரும்ப முடிவு செய்து கிளம்பினர். அப்போது குடிநீருக்காக அலைந்த 3 பேரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

இதில் கிருஷ்ணாநாயக் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டார். அவருக்கு அங்குள்ள கிராமத்தினர் உணவு, தண்ணீர் கொடுத்தனர்.

அதன்பின்னர் கிருஷ்ணா நாயக் புதையலை தேடி காட்டுக்குள் சென்ற தகவலை சிவக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நடுக்காட்டில் சிவக்குமார் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர்.

சிவக்குமார் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் இறந்தது தெரியவந்தது. மாயமான சாமியாரை தேடி வருகின்றனர்.

நல்ல வசதியுள்ள குடும்பம் நல்ல வேலை கைநிறைய சம்பளம் என வாழ்ந்து வந்த சிவக்குமார் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழத்தெரியாமல் பேராசையால் புதையலுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img