சென்னை:
சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதாகக் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த விவகாரத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் – ஈ.பிஎஸ் இணைந்ததும், தினகரனை பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கினர். முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.
கடந்த வாரம் சபாநாயகர் தனபால், 19 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிருந்தார். ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தனபால் கூறியிருந்தார். இதனிடையே, நேற்று முன் தினம் , தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் தனபாலைச் சந்தித்தனர்.
இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முன்பு அளித்த விளக்கத்தை, இடைக்காலப் பதிவாக மட்டுமே கருத முடியும் என்று தனபால் கூறியுள்ளார்.


