பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடிக்கும் அதிகமாகக் காணிக்கை கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழா (மார்ச் 12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை, காவிரியிலிருந்து, புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில், பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைந்த பிறகு நேற்று (மார்ச் 25) பழனி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் உண்டியல் காணிக்கையாக மூன்று கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 920 ரூபாய் கிடைத்துள்ளது.
மேலும், 1,341 கிராம் தங்கமும், வெள்ளி 13 கிலோ 582 கிராமும், வெளிநாட்டு கரன்சி 179 நோட்டுகளும் கிடைத்துள்ளன.
பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.