ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில், பெருமாள் சந்நிதி முன்பு, ஆந்திர மாநில ஐயப்ப பக்தர் கோயில் பணியாளரால் ரத்தம் வருமளவு தாக்கப்பட்டு, கோயிலில் ரத்தம் சிந்த வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஆந்திராவில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் டிச.12 இன்று காலை 6 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வழிபட வந்தனர். அப்போது, அவர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி மேலிட ஆந்திர கோயில்களின் வழக்கத்தில் உள்ளபடி, முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை, பாதுகாப்பு பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் கண்டித்ததுடன், கோயிலில் சத்தம் எதுவும் போடாமல், அமைதியாக சுவாமியை வணங்கிச் செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐயப்ப பக்தர் சென்னா ராவை, கோயில் பாதுகாவலர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கியதில், அவரது மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. அந்த இடம் அரங்கநாதருக்கு நிவேதங்கள் வைத்து திரை சேர்த்து பூஜை செய்யக்கூடிய இடம் என்பதால், சந்நிதியில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பிறகு திறக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் சந்நிதியில் ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சி ஒன்றை எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிந்து தர்மத்தின் மீது நம்பிக்கையில்லாத அரசு ஹிந்து கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோயில் புனிதத்தைக் கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று கோயில் முன்பு பாஜக., சார்பில் போராட்டம் நடைபெறும். 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர். ஸ்ரீரங்கம் கோயில் சந்நிதி முன்பு ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. – என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆந்திரா பக்தர்கள் கோயில் உண்டியல் மீது கைவைத்து தள்ளியதாலும், கோயில் பணியாளரை தாக்கியதாலும்தான் பிரச்னை ஏற்பட்டதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து இந்து பக்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்… இன்று காலை ஐயப்ப பக்தர்களை தாக்கிய இந்து சமய அறநிலைத் துறையின் கையாலாகாததனத்தையும்,இந்து விரோத போக்கையும் கண்டித்து! இன்று (12.12.2023)மாலை 4.00 மணியளவில்! இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் போஜராஜன் அவர்கள் தலைமையில், விசுவ இந்து பரிசத்தினுடைய தென் மாநில அமைப்பாளர் சேதுராமன்,
மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் S.ராஜசேகரன் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ரங்கா! ரங்கா!! கோபுரம் அருகில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.