சென்னை:
டிடிவி ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவர் மீதும் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட இரு பிரிவுகளில் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்க. தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் இருவரும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதை அடுத்து இருவரும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் இதுகுறித்து வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். இதில் முறைகேடு நடந்திருப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினர்.
இந்நிலையில், வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச் செல்வன் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.