மக்களின் தேவைகளை அறிந்து உடனே செய்வேன், தென்காசி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்று, தென்காசி தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை பகுதியில் பாஜக., சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஜான் பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன், தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பல் வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஏப்.5 வெள்ளிக் கிழமை நேற்று புளியரை அருகே தமிழக- கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் வேட்பாளர் ஜான் பாண்டியன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
அங்கிருந்து புளியரை, புதூர், கட்டளைக் குடியிருப்பு, தவணை, கற்குடி ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து தாமரைச் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர், செங்கோட்டை நகரத்திற்கு வந்து கீழ பஜார் முக்கு, தெற்குத் தெரு, வம்பளந்தான் முக்கு, தாலுகா அலுவலகம் சந்திப்பு, மேலூர், பம்பு ஹவுஸ் ரோடு, சேர்வைகாரன்புதுத்தெரு ஆகிய முக்கிய வீதிகளிலும், காலாங்கரை, பெரியபிள்ளைவலசை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தன்னுடைய பிரசாரத்தின் போது ஜான் பாண்டியன் கூறியதாவது:-
நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன். தொகுதிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதுணையாக இருந்து செய்து கொடுப்பேன்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுச் சென்றவர்கள் நாடாளுமன்றத்தில் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல் அவர்களின் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தான் பேசி வந்தார்கள். நான் அப்படி இல்லை. உங்கள் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கை எடுத்து தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று பேசினார்.
பிரசாரத்தின்போது, மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ராமநாதன், மாவட்ட ஓ.பி.சி. அணித் தலைவர் மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ், நகர பொதுச் செயலாளர்கள் பேச்சிமுத்து, மாரி, மேற்பார்வையாளர் சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகராஜன், ராம்குமார், பொண்ணுலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.