நேற்று காலை பாஜவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பவே நேற்றே அந்த பதிவை நீக்கிவிட்ட எச்.ராஜா தற்போது அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று அவர் பதிவு செய்துள்ளதாவது:
நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு எச்.ராஜா தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளதால் இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வந்துவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்