
ஆடி கற்கடகம் மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று புதன் கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக கடந்த 11-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது.தொடர்ந்து, 12-ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 13-ம் தேதி நவக்கிரக கோயில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
நாளை (வியாழக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் 29-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.





