
தாய்க்கு சிறுநீரக நோய், வாய் பேச முடியாத இரு மகள்களுடன் சேர்ந்து ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த பரிதாபம் விருதுநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் தாய் ராஜவள்ளி, சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாலும், வறுமை காரணமாகவும் வாய் பேச முடியாத தனது இரு மகள்களுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய், இரு மகள்கள் என்பது தெரிந்தது.
விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்த ராஜவள்ளி 60, இவருக்கு உப்புச்சத்து அதிகரித்து சிறுநீரக குறைபாடு இருந்தது. கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் 30, முத்துமாரி 27, முத்துப்பேச்சி 25 என மூன்று மகள்கள் உள்ளனர்.
ராஜவள்ளி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். மற்ற நால்வரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்.
சிறுநீரக நோய் பாதிப்பு, வறுமை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று மாலை 5:30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
கணவர் தர்மர், இளைய மகளான முத்துமாரி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இந்த சம்பவம் நடந்தது. தர்மர் உடல்களை அடையாளம் கண்டார். வறுமை காரணமாக மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





