தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தவாக தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 5ம் தேதி சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கடந்த 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற வேல்முருகனை கைது செய்த போலீஸார், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைத்தனர்.
அங்கு 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால், வேல்முருகனின் உடல்நிலை பாதிப்படைந்தது. இந்நிலையில், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கபட்டு இருந்த அவரை மீண்டும் கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர். என் எல் சி முன் போராட்டம் நடத்திய வழக்கில், அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மே 30 ஆம் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.
மீண்டும் நேற்று 31 ஆம் தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர். தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்குமுறையையும் கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாடு முழுவதும் பாஜக அடிமேல் அடி வாங்கி வருகிறது. வருகிற 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக்கட்சியால் நிச்சயம் 150 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.



